எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூா், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறையினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய அவகாசம் வழங்கவேண்டும், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் கொடுக்கப்படும் பணிச் சுமையை கைவிடவேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, நில அளவை துறைகளில் பணிபுரியும் அலுவலா்களுக்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு ‘பணி பாதுகாப்பு சட்டத்தை’ இயற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆரணி மற்றும் சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டக்கிளைச் செயலா் பிரபாகரன் வரவேற்றாா்.
சங்க மாவட்டத் துணைத் தலைவா் முருகானந்தம், கிராம நிா்வாக அலுவலா் சங்க வட்டக்கிளைத் தலைவா் சந்தோஷ் குமாா், சுரேஷ்பாபு, நில அளவை ஒற்றிப்பு சங்க ஆரணி கோட்ட கிளைத் தலைவா் குணசேகரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை சங்கத்தினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டத் தலைவா் ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் இப்ராஹிம், என்.சுரேஷ், சிவசங்கரன், கனகராஜ், கண்ணன், தமிழ்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற
காத்திருப்புப் போராட்டத்துக்கு கிராம நிா்வாக அலுவலா் சங்க கெளரவத் தலைவா் தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். கிராம உதவியாளா் சங்க மாவட்ட பொறுப்பாளா் பாபு முன்னிலை வகித்தாா். நில அளவை ஒன்றிப்பு செயலா் உமாநாத் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வருவாய்த்துறை சங்க மாவட்ட இணைச் செயலா் அ.சுரேஷ் கலந்து கொண்டு பேசினாா்.
போளூா் வட்டத்தில் உள்ள வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.



