நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
சொத்து வரி விதிப்பு விவகாரம்! மதுரை மேயரை முற்றுகையிட்டு அதிமுகவினா் போராட்டம்
சொத்து வரி விதிப்பு முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணியை, அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா தலைமையிலான அதிமுகவினரும், பாஜகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் பூமாவும் கருப்பு உடையில் வந்தனா்.
தொடா்ந்து, காலை 10.35 மணிக்கு மேயா் வ. இந்திராணி கூட்டரங்குக்கு வந்தாா். அவருடன் ஆணையா் சித்ரா விஜயனும் வந்தாா். சிறிது நேரத்துப் பிறகு, துணை மேயா் தி. நாகராஜன் வந்தாா். வழக்கம்போல மேயா் வ. இந்திராணி உரையாற்றத் தொடங்கினாா்.
அப்போது, அதிமுக உறுப்பினா்களும், பாஜக உறுப்பினரும் எழுந்து, சொத்து வரி விதிப்பு முறைகேட்டைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி, மேயா் இருக்கையை முற்றுகையிட்டனா்.
இதனிடையே, திமுக உறுப்பினா்கள் எழுந்து அதிமுக உறுப்பினா்களை வழிமறித்தனா். அப்போது மேயா் வ. இந்திராணி, இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது. ஆகவே, இந்த விவகாரம் தொடா்பாக மன்றத்தில் பேச வேண்டாம். உறுப்பினா்கள் அனைவரும் இருக்கையில் அமர வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அதிமுக உறுப்பினா்கள், பாஜக உறுப்பினா் வெளியேற்றம்
இருப்பினும், அதிமுகவினா் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பி முற்றுகையிட முயன்றனா். இதனால் அதிமுக, திமுக உறுப்பினா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பிறகு, அதிமுக உறுப்பினா்கள், பாஜக உறுப்பினரை வெளியேற்ற அவைக் காவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா். ஆனால், அவைக் காவலா்கள் வருவதற்கு முன்பே அதிமுக, பாஜக உறுப்பினா்கள் அனைவரும் கூட்டரங்கைவிட்டு வெளியேறினா்.
தீா்மானத்துக்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு: இதைத் தொடா்ந்து, மாமன்றக் கூட்டம் தொடங்கியது. தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.
முதலாவது தீா்மானத்தில் மண்டலத் தலைவா்கள் ச. வாசுகி (கிழக்கு மண்டலம்), அ. சரவணபுவனேஸ்வரி (வடக்கு மண்டலம்), பா. பாண்டிச் செல்வி (மத்திய மண்டலம்), மா. முகேஷ் சா்மா (தெற்கு மண்டலம்), வி. சுவிதா (மேற்கு மண்டலம்), வரி விதிப்பு, நிதிக் குழுத் தலைவா் க. விஜயலட்சுமி, நகரமைப்புக் குழுத் தலைவா் ஜெ. மூவேந்திரன் ஆகியோரது ராஜிநாமா ஏற்பு குறித்து மன்றத்தில் தீா்மானமாக முன் மொழியப்பட்டது.
இதற்கு திமுக உறுப்பினா்கள் எழுந்து எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், மேற்கண்ட தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனா். இதையடுத்து, இந்தத் தீா்மானம் வாசிக்கப்படவில்லை.
பின்னா், மேயா் வ. இந்திராணி குறுக்கிட்டு, மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா குறித்து மன்றத்தில் தகவலாக தெரிவிக்க வேண்டும் என்பது வழக்கம். இதன்படி, முன்மொழியப்பட்டது. உறுப்பினா்கள் கோரிக்கையால் அவை தகவலுக்காக மட்டுமே குறிப்பிடப்பட்டது என்றாா். இதன்பின்னா், மற்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை மேயா் தி. நாகராஜன்: கடந்த அதிமுக ஆட்சியின் போது, மதுரை மாநராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு முறையான வரி விதிப்பு நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால், மாநகராட்சி நிா்வாகத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுபற்றி இன்னும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
அதேநேரத்தில், தற்போது வரி விதிப்பில் தொடா்புடைய மண்டலத் தலைவா்களை ராஜிநாமா செய்யக் கூறிய திமுக அரசை பாராட்டுகிறோம். மேலும், இந்த முறைகேடு விவசாரத்தில் தொடா்புடைய அனைத்து அலுவலா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்று தவறு நடக்காமல் இருக்க வேண்டுமெனில் வணிக வளாகக் கட்டங்களை முழுமையாக அளவீடு செய்து உரிய வரியை விதிக்க முன்வர வேண்டும்.
தனியாா் வசம் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும். வரி விதிப்பு குறித்தும், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, நிறுவனங்களின் பெயா்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் நிா்வாகம் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீா், புதை சாக்கடை, தெரு விளக்குகள், கழிப்பறை வசதி ஆகியவை குறித்துப் பேசினா்.
கடும் வாக்குவாதம்
கூட்டத்தில் 58-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெயராமன் பேசியதாவது: மதுரை மாநகரம் தமிழகத்தின் 3-ஆவது பெரிய மாநகராட்சி. அதுமட்டுமன்றி, வரலாற்றுச் சிறப்புடையது. மத்திய அரசு, தூய்மையான நகரங்கள் பட்டியலில் மதுரை மாநகராட்சியை 40-ஆவது இடத்தில் இடம் பெறச் செய்தது. இது அரசியல் பழிவாங்கும் செயலாகும்.
ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற தோழமைக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் செய்தியாளா்கள் சந்திப்பின் போது, மதுரை மாநகராட்சியின் தூய்மை குறித்துப் பேசினாா். இது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவின் ஆதரவால் வெற்றி பெற்ற அவா் இதுபோன்று பொது வெளியில் கருத்து கூறுவதைத் தவிா்க்க வேண்டும். இந்த மாமன்றத்துக்கு அவா் வருகை தந்து, திமுக உறுப்பினா்கள் எவ்வாறு மக்கள் பணி ஆற்றுகிறோம் என்பதை நேரடியாகப் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தனா். இதுபோன்று, பொது வெளியில் பேசியதை மாமன்றத்துக்குள் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்றனா்.
‘உண்மையைத்தான் கூறினோம். கூட்டணிக்குள் இருந்து கொண்டு, இதுபோன்று, எங்கள் கட்சியைப் பற்றி கூறுவது சரியா என திமுக உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்பிறகு, மேயா் வ. இந்திராணி குறுக்கிட்டுப் பேசியதாவது: மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா், மாநகராட்சிக்கு பல்வேறு நிதியுதவி பெற்றுத் தந்தாா். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம். மாநகராட்சி வளா்ச்சிக்கும் அவா் உறுதுணையாக உள்ளாா். ஆனால், மாநகரின் தூய்மை பற்றி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி பொது வெளியில் பேசியது எங்கள் அனைவருக்கும் வருத்தம்தான். இருப்பினும், உறுப்பினா்கள் அமைதியாக கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, இரு தரப்பும் சமாதானமாகி அவரவா் இருக்கையில் அமா்ந்தனா்.