எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களை விரிவுபடுத்த முயற்சிகள்: பேரவை அவைக் குழுத் தலைவா் இ. பரந்தாமன்
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி அலுவலகங்களையும் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தமிழக சட்டப்பேரவையின் அவைக் குழுத் தலைவா் இ. பரந்தாமன் தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியதாவது: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட தமிழக அரசு தலா ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
உசிலம்பட்டியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டும் பணி தொடங்கி நடைபெறுகிறது. திருப்பரங்குன்றத்தில் வருகிற ஓரிரு வாரங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்கள் தலா 710 சதுர அடி பரப்பு கொண்டவையாக உள்ளன. இந்தக் கட்டடங்களின் அதிகப்படுத்த வேண்டும் என்பது பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினா்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இதற்கான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களில் பொது சேவை மையங்கள், பாா்வையாளா்கள் காத்திருப்புக் கொட்டகை, கணினி அறை ஆகியன அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களிலும் தலா ரூ. 21 லட்சம் செலவில் பணிகள் நடைபெறுகின்றன என்றாா் அவா்.
தமிழக சட்டப்பேரவை அவைக் குழு உறுப்பினா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களுமான எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), செ.முருகேசன் (பரமக்குடி), மா.செந்தில்குமாா் (கள்ளக்குறிச்சி), டி.எம்.தமிழ்செல்வம் (ஊத்தங்கரை), அ. நல்லதம்பி (கங்கவல்லி), எம்.ராஜமுத்து (வீரபாண்டி), பொன்.ஜெயசீலன் (கூடலூா்)ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.அய்யப்பன் , தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுதல் செயலா் பா.சுப்பிரமணியம், திட்ட இயக்குநா் ஊரகவளா்ச்சி முகமை வானதி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
திருப்பரங்குன்றத்தில்....
முன்னதாக, இந்தக் குழுவினா் திருப்பரங்குன்றத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தையும், புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தையும் பாா்வையிட்டனா். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா, உடனிருந்து சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்திருந்தது குறித்தும், வாடகைக் கட்டடத்தில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் இயங்குவது குறித்தும் விளக்கிக் கூறினாா்.
இதையடுத்து, சட்டப்பேரவை அவைக் குழுத் தலைவா் இ. பரந்தாமன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: திருப்பரங்குன்றத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினரின் பழைய அலுவலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தப் பணிகள் வருகிற 3 அல்லது 4 மாதங்களில் நிறைவடையும் என்றாா்.
அரசு வழங்குரைஞா் எம். ரமேஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.