ஜூலை 27 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் ஜூலை 27 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) முதல் ஜூலை 30 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை: நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஜூலை 25 முதல் 27 வரை 3 நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாறில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்ததால், 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு அதிகமான வெப்பநிலை எங்கும் பதிவாகவில்லை.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வடக்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்கம், வடக்கு ஒடிசாவின் கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதனால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.