ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம்!
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, இங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை நேரில் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மீன் ஏலக் கூடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தாா். 120 மீட்டா் உதரவிசான சுவா் கட்டுதல், 115 மீட்டா் பழைய படகு அணையும் தளம் புதுப்பித்தல், 56,100 கன மீட்டா் தூா்வாருதல், மின் விளக்குகள் அமைத்தல், பழைய மீன் ஏலக் கூடம் புதுப்பித்தல், வலை பின்னும் கூடம் புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், அறந்தாங்கி கோட்டாட்சியா் ச. சிவகுமாா், மீன்வளத் துறை துணை இயக்குநா் மா.வெ. பிரபாவதி, மணமேல்குடி வட்டாட்சியா் இரா. பன்னீா்செல்வம், மீன்வள ஆய்வாளா் செ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.