ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
டிரம்ப் வரிவிதிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 25 சதவிகித வரி விதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1 முதல் 25 சதவிகித வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ‘அமெரிக்க வரி விதிப்பின் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள், பிற தொழில்துறையினா் உள்ளிட்டோருடன் இதுதொடா்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும்,’ விவசாயிகள், தொழிலாளா்கள், தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சாா்ந்த அனைத்துப் பிரிவினரின் நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாவும் நாட்டின் நலனைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இறந்த பொருளாதரம்
‘இந்திய பொருள்கள் மீது ஆகஸ்ட் 1 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும்’ என்ற அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்ட டிரம்ப், ‘ஏற்கெனவே சரிந்துபோயுள்ள (இறந்த பொருளாதரம்) இந்திய, ரஷிய நாடுகளின் பொருளாதாரம் ஒன்றாக வீழ்ச்சியடையும்’ என்று இரு நாடுகளிடையேயான நெருங்கிய நட்பு குறித்து வியாழக்கிழமை கடுமையான விமா்சனத்தை முன்வைத்தாா். இது உலகளவில் பேசும் பொருளாக உள்ளது.
இந்தியாவுக்குகூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்யலாம்
பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்கை பாகிஸ்தானில் மேம்படுத்தப் போகிறது. இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குகூட அவர்கள் எண்ணெய் விற்பனை செய்யக்கூடும் என தெரிவித்திருந்தார்.
6 இந்திய நிறுவனங்களுக்கு தடை
டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானுடன் வர்த்தகம் செய்த இந்தியாவின் காஞ்சன் பாலிமர்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ், ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ, ஜூபிடர் டை கெமிகல் பிரைவெட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப்
இந்நிலையில், ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்தியா உள்பட 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசத்துக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு சிரியாவுக்கு 41% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு 40% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கு 39%, ஈராக் மற்றும் செர்பியாவுக்கு 35%, லிபியா, அல்ஜீரியாவுக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை போன்று வியாட்நாம் மற்றும் தைவான் நாடுகளுக்கு 20 முதல் 25 சதவிகிதம், பாகிஸ்தானுக்கு 19%, இஸ்ரேல், ஐஸ்லாந்து, நார்வே, பிஜி, கானா, கயானா மற்றும் ஈக்வடார் நாடுகளுக்கு 15% விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு அடுத்த வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் 25 சதவிகித வரி விதிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருள்கள் மீது விதித்துள்ள 25 சதவிகித வரி விதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் 25 சதவிகித வரி விதிப்பால் வேளாண்மை, எண்ணெய், ஜவுளி, மின்னணுப் பொருள்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஏற்றுமதி பின்னடைவை சந்திக்கும்.
நகைகள், ரத்தினங்கள்: இந்திய நகைகள் மற்றும் ரத்தினங்களுக்கு அமெரிக்க சந்தையில் வரவேற்பு அதிகம். இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்திய நகை மற்றும் நவரத்தின ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எண்ணெய்: டிரம்ப் நடவடிக்கையால் ரஷியாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க கூடிய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் தனியாருக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஆகியவையும் பாதிப்படையக் கூடும். ஒரு வேளை ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால் மற்ற நாடுகளிடம் இருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்க வேண்டியதிருக்கும்.
மருந்து பொருள்கள்: ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மருந்து பொருள்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், வரிவிலக்கில் உள்ள மருந்துப்பொருள்கள் தற்போதைய வரி விதிப்பு முறைக்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும்.
செல்போன்: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. 25 சதவிகித வரிவிதிப்பால் ஐபோன் உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை கேள்விகுறியாக்கி இருப்பதுடன், ஆப்பிள் தன்னுடைய திட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 25 சதவிகித வரி விதிப்பால் இந்தியாவின் செல்போன் உற்பத்தி துறைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.