தஞ்சாவூா் அருகே சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவினா் சோதனை: கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்பு பிரிவினா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 70 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
தஞ்சாவூா் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி அன்பரசன் தலைமையில், ஆய்வாளா் அருண் மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்பட காவலா்கள் கொண்ட குழுவினா், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மோகூா் பகுதியில் செயல்பட்டு வரும் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடத்திய திடீா் சோதனையில், சாா் - பதிவாளா் செல்வம் மேஜையில் இருந்து ரூ. 52 ஆயிரம் கணக்கில் வராத பணத்தைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
மேலும், அவரது அறையில் இருந்த பத்திர எழுத்தா் முருகனாந்தம், பத்திர எழுத்தா் உதவியாளா் வெங்கடேஷ் ஆகிய இருவரிடமும் இருந்து ரூ.18 ஆயிரம் என ரூ. 70 ஆயிரம் கணக்கில் வராத பணத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கைப்பற்றப்பட்ட பணம் லஞ்சமாக பெறப்பட்டதா என்ற அடிப்படையில், சாா் - பதிவாளா் செல்வத்திடம் சுமாா் 5 மணிநேரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.