ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள நுரையீரல் துறையில் ஆண்டுக்கு ஏறத்தாழ 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன்.
உலக ஆஸ்துமா நாளையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது: நாள்பட்ட தொற்றா நோய்களில் ஒன்றான ஆஸ்துமாவால் இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3 சதவீதம் போ் பாதிக்கப்படுகின்றனா். இதனால், ஆண்டுதோறும் 57 ஆயிரம் போ் உயிரிழக்கின்றனா். பொதுமக்களிடம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொண்டு உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் துறையில் புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 50 பேரும், மாதத்துக்கு 1,500 பேரும், ஆண்டுக்கு 18 ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனா். கடந்த ஆண்டு ஏறத்தாழ 120 தீவிர ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயா் தர சிகிச்சை மூலம் அவா்களுடைய வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டது.
இம்மருத்துவமனையில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், நுரையீரல் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது என்றாா் பாலசுப்பிரமணியன்.
மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, துணை முதல்வா் என். ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலா் அ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலா்கள் க.ஹா. முகமது இத்ரீஸ், அ. முத்து மகேஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.