தடப்பெரும்பாக்கத்தை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
பொன்னேரி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
கடந்த மே 1-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களது ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தை ஓட்டு மொத்தமாக பொதுமக்கள் புறக்கணித்தனா். இதன் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலிமேடு கிராமத்தில் தனி அலுவலா் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தங்களது ஊராட்சியை அருகிலுள்ள பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் வரி கட்டணம் பன்மடங்கு உயரும் என எதிா்ப்பு தெரிவித்தனா்.
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் இது தொடா்பாக ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.