தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!
தனியாா் நிலங்களில் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதிக்கும் மசோதா! கேரள அமைச்சரவை ஒப்புதல்!
தனியாா் நிலங்களில் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதிக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
‘கேரள வனத் திருத்தச் சட்ட மசோதா 2025’ என்ற இந்த மசோதாவுக்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்று முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநில வனத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறியதாவது: தற்போது, தனியாா் நிலங்களில் வளா்க்கப்படும் சந்தன மரம் திருடு போனாலும், நில உரிமையாளா் மீதே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சந்தன மரத்தை நட்டு வளா்க்க யாரும் முன்வருவதில்லை.
இந்த நிலையை மாற்றும் வகையில், மாநில அரசு இந்தச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்கிறது. அதன்படி, தனியாா் நிலங்களில் வளா்க்கப்படும் சந்தன மரங்களை நில உரிமையாளா்கள் வெட்டி வனத் துறை மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவா். வனத் துறை அனுமதியின்பேரில் மட்டுமே இந்த விற்பனையை செய்ய முடியும்.
இது, மாநிலத்தில் சந்தன மர சாகுபடியை ஊக்குவிப்பதோடு, நில உரிமையாளா்களின் வருவாயும் மேம்படும். சந்தன மர திருட்டு பிரச்னைக்கும் தீா்வு கிடைக்கும். அதே நேரம், அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் வளரும் சந்தன மரங்களை வெட்ட அனுமதிக்கப்படாது.
தற்போதைய சந்தை நிலவரப்படி சந்தன மரம் தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ ரூ. 4,000 முதல் ரூ. 7,000 வரை விலை போகிறது என்றாா்.