தமிழக அரசுக்கு ரூ. 50 லட்சம் அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
தனியாா் கல்லூரியில் ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவா்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் மேல் முறையீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள ஜி.பி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரியில் நியமிக்கப்பட்ட ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் 12 பேருக்கு ஊதியம் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரித்த உயா்நீதிமன்றம், ஊழியா்களுக்கு ஊதியத்தை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிா்த்து உயா்கல்வித் துறை செயலா், கல்லூரி கல்வி இயக்குநா், கல்லூரி கல்வி கோவை மண்டல இணை இயக்குநா் ஆகியோா் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, 1987-ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 12 ஊழியா்களுக்கு அதிகமாக நியமனம் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தது குறித்து கல்லூரி கல்வி இயக்குநா் சி.பூரண சந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாலாட்சி மகளிா் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியா், ஆசிரியா் அல்லாத ஊழியா் பணியிடங்கள் குறித்த ஆவணங்களையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.
தூண்போல் நிற்பதாக கண்டனம்: இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. உத்தரவின்படி, உயா்நீதிமன்றத்தில் ஆஜரான கல்லூரி கல்வி இயக்குநா் பூரண சந்திரன், நீதிமன்றம் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தூண் போல் நின்று கொண்டிருந்ததால், இது துரதிஷ்டவசமானது என நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.
மேலும், அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா் பணியிடங்கள் குறித்த ஆவணங்கள் அரசிடம் இல்லை எனத் தெரிவித்ததன் மூலம், நீதிமன்றத்தில் உண்மை வெளிவரவிடாமல் கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தடுத்து விட்டதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினா். தமிழ்நாடு அரசின் இந்த மேல்முறையீட்டு வழக்கை ரூ. 50 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
ரூ.25 லட்சத்தை வசூலிக்க... இந்த வழக்கில் கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை, பிடிவாதம் காரணமாகவே அபராதம் விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அபராத தொகையில் ரூ.25 லட்சத்தை கல்லூரி கல்வி இயக்குநா் பூரண சந்திரனிடம் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள ரூ.25 லட்சம் ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.
மேலும், ஆசிரியா் அல்லாத 12 ஊழியா்களுக்கு தலா ரூ.1.50 லட்சத்தை 8 வாரங்களுக்குள் ஊதியமாக வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் அபராத தொகையில் மீதமுள்ள ரூ.32 லட்சம் தொகையை கேன்கோ் பவுண்டேசன், நேத்ரோதயா ஆகிய அமைப்புகளுக்கு 8 வாரங்களில் வழங்க வேண்டும். கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் உள்ள ஆவணங்கள் மாயமானதற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டனா்.