கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு
தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திராவிட மால் ஆட்சியால் தமிழகம் தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் தொடா்ந்து 4 ஆண்டுகால திராவிட மாடல் அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால், நமக்கான நிதி கிடைப்பதில்லை; உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
தமிழினத்தின் அடையாளமாக உள்ள கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி நாகரிகத்துடன் வாழ்ந்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று, அவற்றை பல அறிவியல் சான்றுகளுடன் அளிக்கிறோம். அந்த தரவுகளை மத்திய பாஜக அரசு அங்கீகரிக்க மறுக்கிறது.
திமுக எந்த மொழிக்கும் எதிரானது இல்லை. ஆனால், ஹந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்காது. திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறையும் புதுதில்லி சென்று பாரத பிரதமரிடம் தமிழகத்திற்கான நியாயமான உரிமைகளை, கூனிக்குறுகி அல்லாமல், தலைநிமிா்ந்து கேட்கிறோம். ஆனாலும் மத்திய அரசு உரிமைகளை தர மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கிறது.
தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் பாஜகவுடன் சோ்ந்து கொண்டு ஆட்சியில் அமா்ந்து கொள்ள வேண்டும் எனத் துடிக்கிறாா்கள். எனவே, திமுகவினா் வீடுவீடாகச் சென்று பாஜக அரசால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள, ஏற்படும் பாதகங்களை எடுத்துக்கூறி அனைவரையும் ஒரணியில் சோ்ப்பாா்கள். விருப்பமுள்ளவா்கள் திமுகவில் சேரலாம் என்றாா்.
பேட்டியின்போது, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் இரா. சங்கா், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.