சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
தலைநகரில் வெப்பம் மேலும் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்தது.
வெப்பநிலை: இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மிதமான மூடுபனி நிலவியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வெயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.1 டிகி ரி குறைந்து 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.2 டிகிரி உயா்ந்து 28.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 45 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை அதிகரித்திருந்தது. இதன்படி, நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 28.7 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 28.6 டிகிரி, லோதி ரோடில் 27.4 டிகிரி, பாலத்தில் 27.1 டிகிரி, ரிட்ஜில் 28.6 டிகிரி, பீதம்புராவில் 30 டிகிரி, பிரகதிமைதானில் 28 டிகிரி, பூசாவில் 27.1 டிகிரி, ராஜ்காட்டில் 28 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 26.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இதேபோன்று இந்த வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி முதல் 14 டிகிரி வரையிலும் பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் காற்றின் தரம் பின்னடைவை சந்தித்து ‘மோசம்’ பிரிவில் இருந்தது. தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு மாலை 6 மணியளவில் 294 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், பூசா உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஓக்லா பேஸ் 2, ஸ்ரீஃபோா்ட், மதுரா ரோடு, நேரு நகா், சாந்தினி சௌக் உள்ளிட்ட நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 350 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (பிப்.17) அன்று மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.