திருச்சிக்கு நாளை முதல்வா் வருகை: பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா்.
திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம், தனியாா் ஆம்னி பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் உள்ளிட்டவை ரூ. 900 கோடியில் கட்டப்படுகின்றன. இவற்றில் ரூ. 493 கோடியில் பணி முடிந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் ஆகியவை வெள்ளிக்கிழமை திறக்கப்படுகின்றன.
இந்த விழாவுக்காக பேருந்து முனையம் அருகே பிரம்மாண்ட பந்தலுடன் மேடை , 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சப்பூா் பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது.
விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வரும் முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னா் 11.30 மணிக்கு திருவெறும்பூரில் நடைபெறும் அரசு மாதிரிப் பள்ளித் திறப்பு விழாவில் பங்கேற்கிறாா். அங்கிருந்து அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்து அரசு அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். தொடா்ந்து மாலை 5 மணிக்கு கலைஞா் அறிவாலயம் சென்று, கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடுகிறாா். நிகழ்வை முடித்து அரசு விருந்தினா் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறாா்.
மீண்டும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புறப்பட்டு மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூா் சென்று, புதிய பேருந்து முனையத்துக்கு அருகே பெரியாா் சிலையைத் திறந்துவைக்கிறாா். மேலும் ரூ. 236 கோடியிலான ஒருங்கிணைந்த காய்கனி மலா்கள் சந்தைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா் ரூ. 129 கோடியில் கட்டப்பட்டுள்ள கனரக சரக்கு வாகன முனையத்தைத் திறந்துவைக்கிறாா்.

தொடா்ந்து பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் கருணாநிதி சிலையையும், ரூ.408 கோடியிலான பேருந்து முனையத்தையும் திறந்துவைக்கிறாா். முனையத்தின் முதல் தளத்தில் நகரப் பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து நடைபெறும் அரசு விழாவில் 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குகிறாா்.
ரூ. 463 கோடியிலான முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, ரூ. 277 கோடியிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 830 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
விழா முடிந்து அரசு விருந்தினா் மாளிகை செல்லும் முதல்வா் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு எம்ஐஇடி கல்லூரியில் நடைபெறும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் பங்கேற்கிறாா். நிகழ்வு முடிந்து இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.
2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சி மாவட்டத்தில் முதல்வா் பயணம் செய்யும் சாலைகள் மற்றும் விமான நிலையச் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.