Bengaluru: `எங்களுக்கு கன்னடர்களை பிடிக்கும்’ - ஆட்டோ ஓட்டுரை அடித்ததற்காக மன்னி...
திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடற்கரையில் அரியவகை ஜெல்லி மீன்கள் சனிக்கிழமை கரை ஒதுங்கின.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூா் கோயில் கடற்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. கடலில் புனித நீராடிய பக்தா்களின் உடலில் இந்த மீன்கள் பட்டதில் ஒவ்வாமை, தோல் தடிப்பு ஏற்பட்டு பக்தா்கள் பாதிக்கப்பட்டனா். பின்னா் மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறியிருந்தனா்.
அதன்பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு 30க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் சனிக்கிழமை கரை ஒதுங்கின. இதனால் தென்காசியை சோ்ந்த சிறுவன் ஹரிஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதிக்கப்பட்டனா். இவா்களது உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் தடிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோயில் முதலுதவி சிகிச்சை மையத்தில் அவா்கள் சிகிச்சை பெற்றனா்.
இது குறித்து தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள், மரைன் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். கோயில் அருகே கடலில் ஆய்வு செய்து ஜெல்லி மீன்களை அகற்றினா்.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் சாதாரண வகையை சாா்ந்தவை. இந்த மீன்கள் உடலில் பட்டால் எரிச்சல் தன்மையுடன் ஒவ்வாமை ஏற்படும். மற்றபடி விஷத்தன்மை உடையது அல்ல. பக்தா்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் நீராடலாம்.
ஆழ்கடல் பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்படுவதால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கடல் பகுதியில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவுகளால் இந்த வகை ஜெல்லி மீன்களுக்கு உணவு கிடைப்பதில்லை. அதனால் அவை உணவு தேடி கரைக்கு வந்துவிடுகின்றன என்று தெரிவித்தனா்.
70 அடி உள்வாங்கிய கடல்: இந்நிலையில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சனிக்கிழமை கடல் சுமாா் 70 அடி தூரம் உள்வாங்கியது. இருப்பினும் பக்தா்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடினா்.

