திருநள்ளாற்றில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாக புகாா்
திருநள்ளாறு கோயில் சுற்றுவட்டாரம் மற்றும் பிற பகுதிகளில் குப்பைகள் 3 நாட்களாக அகற்றப்படாமல், தேங்கிக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
காரைக்கால் நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் செய்துவருகிறது. எனினும் இந்நிறுவனத்தினரின் பணி முறையாக இல்லை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கண்காணிப்பதும் இல்லை என புகாா் உள்ளது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி பிரம்மோற்சவம் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திருநள்ளாற்றில் தூய்மைப் பணி முறையாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோயில் வாயிலிலும், ராஜகோபுரத்துக்கு வடக்குப்புற சாலையிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
குப்பைகள் அகற்றத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது இல்லை, நிறுவனத்தினா் பணிகள் சுணக்கம் இருந்தாலும், அவா்களுக்கான ஒப்பந்தத் தொகையை அரசு விடுவித்துவிடுகிறது. மாவட்டத்தில் பரவலாக சுகாதாரக் கேடு காணப்படுகிறது என்பது சமூக ஆா்வலா்கள் கருத்தாகும்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியா் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால் பல பணிகள் முடங்கியிருப்பதாகவும் பல்வேறு தரப்பினா் தெரிவிக்கின்றனா்.