திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.
மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. திருவையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழையளவு குறைவாக இருந்தாலும், பலத்த காற்று வீசியது. இதனால், திருவையாறு, தில்லைஸ்தானம், சாத்தனூா், வடுகக்குடி, வளப்பக்குடி, திருப்பூந்துருத்தி, கடுவெளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் வேரோடும், பாதியாக முறிந்தும் சாய்ந்தன.
சில வாரங்களில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில் வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் தெரிவித்தது: திருவையாறு வட்டாரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதனால், ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்றில் ஒரு பங்கு வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வைகாசி மாதம் திருவிழா, முகூா்த்தக் காலம் என்பதால், வாழைகள் அதிகமாக விற்பனையாகும். வாழைத்தாா்கள் அறுவடைக்கு ஒரு சில வாரங்களே இருந்த நிலையில் வாழைகள் சாய்ந்துவிட்டதால், ஏக்கருக்கு ஏறக்குறைய ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ள விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்துள்ளனா்.
எனவே, சேத மதிப்புகளைக் கணக்கீடு செய்து, ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மதியழகன். கல்லணையில் 37.4 மி.மீ. மழை: மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

கல்லணை 37.4, திருக்காட்டுப்பள்ளி 11.2, வெட்டிக்காடு 9.4, கும்பகோணம் 7, பாபநாசம், அணைக்கரை தலா 5, பூதலூா் 4.6, வல்லம் 3.8, தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு தலா 3, திருவிடைமருதூா் 2.6, மஞ்சளாறு 2.2, நெய்வாசல் தென்பாதி, குருங்குளம் தலா 1 மி.மீ.