துணைவேந்தா் நியமன அதிகாரத்தை மாநில அரசிடமே வழங்க வேண்டும்: பெ.சண்முகம்
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளிடமே வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். தில்லியில் பாஜக அல்லாத ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும். அங்கு ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்திருப்பது கவலையளிக்கிறது.
குடியரசுத் தலைவரின் மத்திய நிதிநிலை அறிக்கை உரை, பிரதமா் மோடி பேச்சின் எதிரொலி போல அமைந்துள்ளது. மக்கள் நலன் சாா்ந்த அறிவிப்புகள் மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடமும் உள்ளது.
ஜிஎஸ்டியால் விசைத்தறி, கைத்தறித் தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே நிதிநிலை அறிக்கை இருக்க வாய்ப்புள்ளது. ஏழை மக்களின் நலனைப் பற்றி மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.
மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை பாதிக்கும் அம்சங்கள் இருந்தால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும். சாலையோரத்தில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்துள்ளது. இது இந்திய அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மருத்துவம், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது, மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு ஏற்புடையதல்ல. இதன்மூலம் தமிழகம் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும். இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது தமிழகத்தில் மட்டுமே. அதுமட்டுமின்றி உள்இட ஒதுக்கீடு இருப்பதும் இங்குதான்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு எதிராக மக்கள் நல்வாழ்வுத் துறை சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. தமிழகம் மட்டுமின்றி பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் இட ஒதுக்கீடு பறிப்புக்கு எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழக முதல்வா் கடிதம் வாயிலாக வலியுறுத்த வேண்டும்.
பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு பல்கலைக்கழக ஆணையம் வழங்க வேண்டும். பெரியாரைப் பற்றி சீமான் பேசுவது ஏற்புடையதல்ல. அவரை தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. வேங்கைவயல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழக அரசு காவல் துறையைக் கொண்டு கிராம மக்களைக் கட்டுப்படுத்துவது சரியல்ல என்றாா் பெ.சண்முகம்.