`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே
தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா்.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பஹல்காம் சம்பவத்துக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை தரும் வகையில் அமைந்தது. சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை.
பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை முறியடிக்க, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை பிரதமா் மோடி அனுப்பியது வரவேற்கத்தக்கது.
தூய்மைப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கெனவே வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தூய்மைப் பணிக்கான போதிய நிதியும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அவற்றை முறையாக மாநிலங்கள் செலவிட வேண்டும். அப்படி செலவிடுவதை மத்திய அரசின் சமூக நீதித் துறை கண்காணிக்கும்.
அனைத்துத் தரப்பினரும் பலனடையும் வகையில் மத்திய அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றாா் ராம்தாஸ் அதவாலே. பேட்டியின்போது, புதுவை மாநில ஆதிதிராவிடா், பழங்குடியினா் துறை இயக்குநா் இளங்கோவன் உடனிருந்தாா்.