புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுவையில் சில நாள்களுக்கு மழையுடன் கடல்காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், வியாழக்கிழமை காலை புதுச்சேரி பழைய துறைமுகத்தில் உள்ள புயல் கூண்டில் 1-ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
மீன்வளத் துறை அறிவுறுத்தல்: இந்த நிலையில் புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவா்களுக்கான அறிவுறுத்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (மே 29, 30) தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.லோ மீ. வேகம் வரையில் வீசக்கூடும். இடையிடையே 60 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆகவே, புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவா்கள் கடலுக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.