திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா...
தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு? செல்வப்பெருந்தகை மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு!
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு மே 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு உண்மைதானா என அறிய விரும்புகிறோம்.
மேலும், பெருநகர சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரேற்று வாரியத்தின் ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மே 21 ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அளித்த பொதுநல மனுவில் தெரிவித்ததாவது, தூய்மைப் பணியாளர்களுக்காக மத்திய அரசு நேஷனல் ஆக்ஷ்ன் ஃபார் மெக்கனைஸ்டு சானிட்டேஷன் எக்கோ சிஸ்டம் (NAMASTE) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டில், கைமுறை துப்புரவு பணியை முற்றிலும் ஒழிக்க அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தை (AABCS) தமிழக அரசு கொண்டு வந்தது. கையால் துப்புரவு பணி மேற்கொள்பவர்களுக்கு மூலதன மானியங்கள் மற்றும் வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை அளிப்பதே இந்தத் திட்டங்களின் நோக்கம்.
இந்தத் திட்டத்தை மாநில அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, தொழில்கள் ஆணையர், தொழில் மற்றும் வணிக இயக்குநர் மூலம் செயல்படுத்த வேண்டும். ஆனால், செயல்படுத்தும் பொறுப்புகள் சட்டவிரோதமாக தனியார் நிறுவனமான தலித் இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி (DICCI) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோடிக்கணக்கான அளவில் முறைகேடுக்கு வழிவகுத்துள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் முக்கிய பங்கு வகிக்கிறார். டிஐசிசிஐ நிறுவனம் பரிந்துரைத்த பெரும்பாலான பயனாளிகள், காங்கிரஸ் கட்சியின் பட்டியலின மற்றும் பட்டியலின பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இருப்பினும், கடன் வழங்குவதற்கு அவர்கள் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதுகுறித்து, புகாரும் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மே 14 ஆம் தேதியில் உத்தரவிட்டிருந்தது.