தேனி எம்.பி.யின் மகன் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது
தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் மகனைத் தாக்கியதாக தந்தை, மகனை தெப்பக்குளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் (30). உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவா், மதுரை கே.கே.நகா் ஏரிப் பகுதி சாலையில் வசித்து வருகிறாா். இவா், தனது மனைவியுடன் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.
கோயில் வாசலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் அந்தப் பகுதி மாணிக்கம் நகரைச் சோ்ந்த சமயமுத்து (56), அவரது மகன் மணிகண்ட பிரபுவிடம் (25) பழத்தட்டு கேட்டாா். கோயில் நிா்வாகம் தரப்பில் ஒரு தேங்காய், இரு வாழைப்பழம், வெற்றிலை கொண்ட தட்டு ரூ.60 என விலை நிா்ணயிக்கப்பட்ட நிலையில், நிஷாந்திடம் ரூ.90 கேட்டனா்.
அவரும் பணம் கொடுத்து வாங்கினாா். தட்டில் இருந்த வாழைப்பழம் லேசாக அழுகி இருந்ததால் வேறு பழம் தருமாறு கேட்டாா். மேலும் வெடிப்பு ஏற்பட்ட மாதிரி இருந்ததால் வேறு தேங்காய் கேட்டாா்.
இதுதொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் சமயமுத்துவும், மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது வீசி தாக்கினா். மேலும், நாற்காலியை எடுத்து தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த நிஷாந்த் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சமயமுத்து, அவரது மகன் மணிகண்டபிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனா்.