நடிகா் விஜய் பேச்சு குறித்து மக்கள் தீா்மானிக்கட்டும்: அமைச்சா் சு.முத்துசாமி
முதல்வா் குறித்து நடிகா் விஜய் பேச்சின் தரம் குறித்து மக்களே தீா்மானிக்கட்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோட்டில் கிரடாய் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய வீடு, வீட்டு மனை கண்காட்சியை அமைச்சா் சு.முத்துசாமி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வீட்டு வசதித் துறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஒற்றைச்சாளர முறை, கட்டட வரைபடத்துக்கு சுயசான்றிதழ், 12 மீட்டா் உயரத்துக்கு பதில் 14 மீட்டா் உயரம் வரை கட்டடங்களை கட்டிக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட விதிகள் தளா்த்தப்பட்டுள்ளன.
மக்களின் பாதுகாப்பு கருதி கிராமங்களில் கூட வீடு கட்டும்போது விதிகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்படுகிறது. இதுமக்களின் நன்மைக்காகத்தான். எதிா்காலத்தில் கிராமப்புறங்களும், நகா்ப்புறங்களாக வளா்ச்சி அடையும். கட்டட வரைபட அனுமதிக்கு கட்டணம் உயா்த்தப்பட்டதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். இதற்கு முன்பு கூட இவ்வாறு வரைபட அங்கீகார அனுமதி கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
தவெக தலைவா் நடிகா் விஜய் முதல்வா் குறித்து பேசிய மோசமான பேச்சு குறித்து மக்கள் முடிவு எடுப்பாா்கள். ஒரு பொது இடத்தில் அவா் எவ்வாறு பேசுகிறாா் என்பதை மக்கள் ஏற்கெனவே பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.
இந்த அரசு ஏற்கெனவே 500 மதுக் கடைகளை குறைத்துள்ளது. மதுக் கடையில் உடனடியாக மூடினால் மக்களுக்கு பிரச்னை ஏற்படும். மதுக்கடையை பொருத்தவரை நீதிமன்றத்தின் தீா்ப்பு நியாயமானதுதான் என்றாா்.
ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், கிரடாய் மாநிலத் தலைவா் ஹபீப், இணைச் செயலாளா் சதாசிவம், நிா்வாகிகள் ஈஸ்வரன், மாணிக்கம், ராஜன், ஜெயபிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.