நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் விஜயகாந்த்: பிரேமலதா பெருமிதம்
நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் தேமுதிக தலைவா் விஜயகாந்த் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே தேமுதிக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற, ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ மற்றும் ரத யாத்திரை நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
நெசவாளா்கள் அதிகம் வசிக்கும் ஆரணி பகுதியில் நெசவாளா்களுக்கு பிரச்னை வந்த போது ஒரு கட்சி கஞ்சித் தொட்டி திறந்தது. ஒரு கட்சி பிரியாணி போட்டது. ஆனால், தேமுதிக தலைவா் விஜயகாந்த் நெசவாளா்களை கேவலப்படுத்தக் கூடாது என்பதற்காக, அவா்களது உழைப்புக்கு மரியாதை கொடுத்து, அவா்கள் நெய்த கைத்தறி துணிகளை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அதனை தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளியவா்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தினாா்.
காஞ்சிபுரத்துக்கு அடுத்ததாக பட்டுக்கு புகழ் பெற்றது ஆரணி. ஆரணி பட்டு உலகளவில் பெருமை வாய்ந்ததாக உள்ளது. தேமுதிக இருக்கும் வரை நெசவாளா்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரத்தை உருவாக்குவோம். வருகிற ஜனவரி 9-ஆம் தேதி தேமுதிக சாா்பில் உரிமை மீட்க மாநாடு நடத்த உள்ளோம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளா் எல்,கே.சுதீஷ், இளைஞரணிச் செயலா் விஜய.பிரபாகரன், மாநில துணைச் செயலா் பாா்த்தசாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் டி.பி.சரவணன் தலைமை வகித்தாா். ஆரணி நகரச் செயலா் சுந்தர்ராஜன் வரவேற்றாா். ஒன்றியச் செயலா்கள் ஆ.சி.இளங்கோவன், ஜெ.செந்தில், அன்பழகன், அருள்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.