இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!
நெல்லையப்பா் கோயில் திருவிழா முன்னேற்பாடு: போக்குவரத்து மாற்றம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இம்மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சிகர நிகழ்வாக ஜூலை 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுவாமி-அம்மன் தேரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த பைபா் கண்ணாடி தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தூய்மை செய்யப்பட்டது. சுவாமி சந்நிதி வண்ண துணிகளுடன் கூடிய அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் இருந்து ரத வீதி வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சொக்கப்பனை முக்கு பகுதியில் இருந்து பாரதி தெரு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தோ்களின் சக்கரங்கள் ஒவ்வொரு ரத வீதியையும் கடக்கும்போது விளைவில் திரும்புவதற்கு மரத்தடிகள் பயன்படுத்தப்படும். இதற்கு 100-க்கும் மேற்பட்ட மரத்தடிகள் உரிய கைப்பிடியுடன் தயாரிக்கப்படுவது வழக்கம். அந்தப் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.