படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களிடமிருந்து உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞா்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவை தொடா்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓா் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் படித்தவா்கள் மற்றும் அரசின் பிற துறைசாா்ந்த நலத் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் ஆகியோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
உதவித்தொகை விண்ணப்பப் படிவம்பெற மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையைக் காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயன்பெற்றவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்களாவா்.
பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் வந்து சமா்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.