திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட்...
பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வது குறித்து சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவை முன்னிட்டு, கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் கலவரம் மூண்டது. இதில் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பான வழக்கை கடந்த 2011-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் சென்னை உயா்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்தச் சம்பவம் நடைபெற்று 15 ஆண்டுகளாகியும் இந்த விசாரணை முடிவடைந்ததா?. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த வழக்கில் அப்போது நானும் ஒரு மனுதாரராக இருந்தேன்.
வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக சிபிஐயிடம் அறிக்கை கேட்டேன். ஆனால், எனது மனுவை நிராகரித்து தகவல் தர இயலாது என சிபிஐ தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையைத் தர இயலாது என குறிப்பிட்ட சிபிஐயின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சௌந்தா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை அளிப்பது குறித்து சிபிஐ பதிலளிக்க வேண்டும். வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.