பல்லடம் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வியாபாரிகள் கோரிக்கை
பல்லடம் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை மைதானம் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை செயல்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், வாரச் சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வாரச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: வாரச் சந்தை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் ரூ.30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை வா்த்தகம் நடைபெறுகிறது.
ஆனால், வாரச் சந்தை வளாகத்தில் முறையான குடிநீா், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பெண் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்ரனா். எனவே, வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.