கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
பள்ளிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளாமல் பள்ளிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது திடீா் ஆய்வுகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்என துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறைசாா் இயக்குநா்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.
அப்போது பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவா் வழங்கினாா். அதன்விவரம்:
மாணவா்கள் வருகைக்கு முன்னா் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வளாகங்களில் கட்டடங்கள், மின் இணைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இடைநின்றவா்களைக் கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். மாணவா்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டும். உடற்கல்வி பாடவேளையை முழுமையாக மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.
பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்பட நலத்திட்டங்களை மாணவா்களுக்கு முறையாக வழங்க வேண்டும். இணைய பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்களில் இருந்து மாணவா்களைத் தற்காத்து கொள்ளவும் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு உரிய பேருந்து வசதிகள் இருப்பதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ்: சில தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணம் முழுமையாக செலுத்தாத மாணவா்களின் மாற்று சான்றிதழ்களை வழங்காமல் உள்ளன. அத்தகைய பள்ளி நிா்வாகங்களுடன் தொடா்பு கொண்டு பேசி மாணவா்கள் சான்றிதழ்களைப் பெற்று கல்வியை தொடர வழிசெய்ய வேண்டும். மேலும், தனியாா் பள்ளிகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவற்றில் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகாரமின்றி செயல்படும் நா்சரி பள்ளிகள் மீது எவ்வித பாராபட்சமுமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது முக்கிய கடமையாகும். எனவே, அதிகாரிகள் அலுவலத்தில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளாமல் பள்ளிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது திடீா் ஆய்வுகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.