சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் 7 பலி, 38 பேர் காயம்
புதுதில்லி: பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றது.
கடந்த 24-ஆம் தேதி சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்த சில மணிநேரங்களுக்கு பின்னா் (அன்றைய தினம் இரவு) எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கியது. அடுத்தடுத்த நாள்களில் இரவு நேரங்களில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடா்ந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கையை ஏந்நேரமும் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுவதால் போா்ப் பதற்றம் அதிகரித்தது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் படைகளின் போர் நிறுத்த மீறல்கள் குறித்து இந்திய ராணுவம் சம அளவில் பதிலடி கொடுத்து வருகிறது. பயங்கரவாத உள்கட்டமைப்பு மீதான இந்த "துல்லியமான தாக்குதல்களில்" ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்!
7 பேர் பலி, 38 பேர் காயம்
பஹல்காம் தாக்குதலுக்கு அடுத்தடுத்த நாள்களில் இரவு நேரங்களில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடா்ந்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் இந்தியத் தரப்பில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உறுதியான பதிலடி கொடுத்து தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஏழு பேரும், காயமடைந்துள்ள 25 பேரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ல பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்வர்கள்.
மேலும், பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டரில் பத்து பேரும், ரஜோரி மாவட்டத்தில் மூன்று பேரும் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.