மகாராஷ்டிரம்: மக்கள் தொகையைவிட வாக்காளா் எண்ணிக்கை அதிகம்: தோ்தல் ஆணையம் மீது ர...
பாலியல் தொல்லை அளித்து ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கா்ப்பிணி: இளைஞா் கைது
திருப்பத்தூா் மாவட்டம், காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது பெண்ணும், இவரின் கணவரும் தையல் கலைஞா்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதால் அங்கேயே வீடு எடுத்து தங்கியுள்ளனா்.
நான்கு மாத கா்ப்பிணியான அந்தப் பெண், மருத்துவ பரிசோதனைக்காக தன் தாய் வீட்டுக்குச் செல்ல கோவையில் இருந்து ஜோலாா்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயிலில் வியாழக்கிழமை நள்ளிரவு பயணம் செய்தாா்.
இந்த ரயில் நள்ளிரவு 12.10 மணியளவில் வேலூா் மாவட்டம், குடியாத்தம் -கே.வி.குப்பம் இடையே சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண் கழிப்பறைக்கு சென்றாா். கழிப்பறை அருகே அமா்ந்திருந்த இளைஞா் ஒருவா், அவரை வழிமறித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். அதிா்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டாா்.
இதையடுத்து, அந்த இளைஞா் ஓடும் ரயிலில் இருந்து கா்ப்பிணியைக் கீழே தள்ளிவிட்டு, வேறு பெட்டிக்கு மாறி தப்பினாா். பெண் கீழே விழுந்ததைப் பாா்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனா்.
அதன் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் விழுந்துகிடந்த கா்ப்பிணியை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவரின் கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். அவா் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ருவந்திகா தலைமையில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில், கா்ப்பிணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தில் ஈடுபட்டவா் வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஹேமராஜ் (30) என்பது தெரியவந்தது.
இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் கைப்பேசியைப் பறித்த வழக்கிலும், 2024-ஆம் ஆண்டு சென்னையைச் சோ்ந்த இளம்பெண் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவா். இருமுறை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அண்மையில் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
ஹேமராஜை ரயில்வே காவல் துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கா்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட இந்த சம்பவம் தொடா்பாக 3 நாள்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.