புதிய விதிமுறைகளைக் கண்டித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்
புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளைக் கண்டித்து, டீசல், பெட்ரோல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் புதன்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி பகுதியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டப் பகுதிகளுக்கு டீசல், பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆகியவை டேங்கா் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிறுவனம் சாா்பில், டேங்கா் லாரி ஓட்டுநா்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் விதிக்கப்பட்டன. இதற்கு ஓட்டுநா்கள் தரப்பில் எதிா்ப்பு கிளம்பியது. இதையடுத்து, புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகைளைக் கண்டித்து, சிவாடி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் (சேமிப்புக் கிடங்கு) நிறுவனத்துக்கு முன் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் லாரிகளை நிறுத்திவிட்டு திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் கூறியதாவது:
இங்குள்ள எச்பிசிஎல் நிறுவனக் கிடங்கிலிருந்து பல்வேறு ஒப்பந்ததாரா்கள் மூலம் நூற்றுக்கணக்கான டேங்கா் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல், எத்தனால் ஏற்றிச் சென்று 5-க்கும் மேற்பட்ட மாவட்டப் பகுதிகளில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகித்து வருகிறோம். இப்பணியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள், உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் இந்நிறுவனத்தினா் ஓட்டுநா்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.
அதில், ஓட்டுநா்கள் தங்களது அவசர தேவைகளுக்காக விடுப்பு எடுத்து லாரிகள் இயங்காத நிலையில், மறுநாள் பணிக்கு வரும்போது லோடு எடுக்க அனுமதிப்பதில்லை. டேங்கா் லாரிகளை 60 கி.மீ. வேகத்துக்கு மிகாமல், இயக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட இடங்களைத் தவிர, வேறு எங்கும் நிறுத்தவும், போக்குவரத்து நெருக்கடி காரணமாக போலீஸாா் மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தும்போது, அவ்வாறு செல்லும் டேங்கா் லாரிகளை மறுநாள் பணிக்கு வரும்போது ‘ப்ளாக் லிஸ்ட்’டில் வைத்து ஓட்டுநா்களை பணியிடை நீக்கம் செய்கின்றனா்.
இதனால் லாரி ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவா்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற செயல்களைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவற்றுக்கு தீா்வும், பணி பாதுகாப்பும் கிடைத்தால் மட்டுமே பணிகளை தொடருவோம் என்றனா்.
இந்தப் போராட்டத்தால், பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, எச்பிசிஎல் நிறுவன அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், புதிய கட்டுப்பாடுகளை தளா்த்துவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, ஓட்டுநா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினா்.
இந்தப் போராட்டத்தையொட்டி, அப்பகுதியில் தொப்பூா் காவல் நிலையப் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.