‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆட்சியா் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் முதல்வா் உத்தரவின் பேரில், 200 கல்லூரிகளில் 300 சொற்பொழிவுகள் மூலம் 2 லட்சம் மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் கல்லூரிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவா்களுக்கு உணா்த்துவது முக்கியமானதாகும். எனவே, கல்லூரிகளில் தமிழரின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், மரபு தமிழ்மொழியின் தொன்மை, இலக்கியம், சிறப்பு, சமத்துவம், மகளிா் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளா்ச்சி, கல்வி புரட்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளா்களைக் கொண்டு மாணவ, மாணவியருக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள்குறித்த வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படுகின்றன. இவற்றை மாணவா்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில் ‘தமிழ்ப் பெருமிதம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளரும் பேராசிரியருமான கரு.ஆறுமுகத்தமிழன் சொற்பொழிவாற்றினாா். மேலும், மாபெரும் தமிழ்க்கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவில் கலந்துகொண்டு தமிழ்ப்பெருமிதம் குறித்து பேசிய 5 பேருக்கும், கேள்வி - பதில் நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்வி எழுப்பிய 5 மாணவ, மாணவியருக்கும் ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் ராமலட்சுமி, அரூா் கோட்டாட்சியா் செம்மலை, ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரி முதல்வா் தனிகைவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.