புதுச்சேரி மதுபானங்கள் கடத்தியவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
புதுச்சேரி மதுபானங்களை கடத்தியவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த வடமதுரை, அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சதீஸ்கண்ணன்(38). இவா் தற்போது கரூா் பழைய சுக்காலியூா் பகுதியில் வசித்து வந்தாா். இவா் கடந்த மாதம் 5-ஆம்தேதி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக மதுபானங்களை காரில் கடத்தி வந்தபோது, சுக்காலியூா் அருகே காருடன் பிடிப்பட்டாா். இதையடுத்து அவரை கரூா் மாவட்ட மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 233 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் சதீஸ்கண்ணனை சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சதீஸ்கண்ணன் புதன்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.