புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!
புதுச்சேரியில் தியாகிகள் நினைவு தினம்அனுசரிப்பு
பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுக்க நடந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிா்த்தியாகம் செய்த தியாகிகள் நினைவு தினம் புதுவையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆசியக் கண்டத்திலேயே முதன் முதலில் புதுச்சேரி மண்ணில்தான் 8 மணி நேர வேலை செய்யும் உரிமை, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட உரிமைகள் பெறப்பட்டன. அந்த முத்திரையைப் பதித்த நாள் ஜூலை-30 தியாகிகள் தினம்.1936-ம் ஆண்டு ஜூலை 30-ம் நாள் உரிமை குரல் எழுப்பி தளா்வற்ற தொடா் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பஞ்சாலை தொழிலாளா்களின் எதிா்ப்பை அடக்க முடியாத பிரெஞ்சு ராணுவம் தொழிலாளா்கள் மீது துப்பாக்கிகளைக் கொண்டு தாக்கியது. 12 தொழிலாளா்கள் இந்த துப்பாக்கி சூட்டில் வீர மரணமடைந்தனா். புதுச்சேரியின்
ஏஐடியூசி தொழிற்சங்க ஸ்தாபகா் வ.சுப்பையா தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் எழுந்த ஆதரவு அலை பிரெஞ்சு அரசைப் பணிய வைத்தது என்பது வரலாறு.
அந்தவகையில் புதன்கிழமை ( ஜூலை 30 )தியாகிகள் தின 89 ஆம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது.புதுச்சேரி- கடலூா் சாலை ரயில்வே கேட் அருகில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் எழுச்சியோடு நடைபெற்ற ஜூலை 30 தியாகிகள் 89-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் தொழிலாளா்கள், அணி, அணியாக கலந்து கொண்டு மலா்வளையம் வைத்து தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சிக்கு பஞ்சாலை தொழிலாளா் சங்க செயலா் ந.மூா்த்தி தலைமை வகித்தாா். பஞ்சாலை சங்கத்தலைவா் அபிஷேகம் ஜூலை 30 தியாகிகள் பெயரால் உறுதிமொழி வாசித்தாா். தியாகிகள் கொடியை முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன் ஏற்றி வைத்தாா். ஏஐடியூசி கொடியை பஞ்சாலை சங்க மூத்தத் தலைவா் த .கன்னியப்பன் ஏற்றி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநில செயலாளா் அ.மு.சலீம், ஏஐடியூசி மாநில தலைவா் தினேஷ் பொன்னையா, ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் சேதுசெல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் நாரா.கலைநாதன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
முன்னதாக மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் எதிரில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு வந்தனா்.