`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா
கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்!
ஜூலை 31-ம் தேதி திருநெல்வேலி வருகை தந்த வி.சி.க தலைவர் திருமாவளவன், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் தெரிவித்ததோடு கவின்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
அடிப்படை அறிவு கூட காவல்துறை அதிகாரிகளுக்கு இல்லையா?
அதில் பேசிய வி.சி.க தலைவர் திருமா, “கவின்குமார் ஆணவப் படுகொலை விவகாரத்தில் FIR பதிவு செய்த பிறகும் பெண்ணில் பெற்றோரை கைது செய்து விசாரிக்காமல் இருந்திருக்கிறது காவல்துறை. கேட்டால் குற்றவாளிகள் அல்லாதவர்களை எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்கின்றார்கள். இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை காவல்துறை எப்படி முடிவு செய்யலாம்.
விக்டிம் சைடு நிக்கணுமா இல்ல பாதிக்கப்பட்டவன் சைடு நிக்கணுமா என்கின்ற அடிப்படை அறிவு கூட காவல்துறை அதிகாரிகளுக்கு இல்லையா..? அதுக்கு தானே உனக்கு யூனிஃபார்ம்..? நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்பதை ஜூடீசியல் பார்த்துக்கும். கைது செய்து விசாரணை நடத்துவது தான் உங்க வேலை
ஜீன்ஸ் போட்டு கண்ணாடி போட்டு எங்க குலத்து பெண்களை மயக்க வந்து இருக்காங்கன்னு சொல்றாங்க. இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்றதுனால ஆண்களை நீங்கள் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக, உங்கள் வீட்டுப் பெண்களை நீங்களே கொச்சைப்படுத்தி கொள்கிறீர்கள்" எனக் கொதித்தார்
தொடர்ந்து தி.மு.க அரசுக்கு கோரிக்கைகளை அடுக்கிய அவர் “தயவுசெய்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு இதை கொண்டு போக வேண்டாம். உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் போட்டு மானிட்டர் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இழப்பீடு வேண்டாம் என்று சொல்கின்றனர். அது வேற விஷயம்.
ஆனாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு, ரெண்டு ஏக்கரில் இருந்து ஐந்து ஏக்கர் நிலம், அரசு வேலைவாய்ப்பு, 12 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்களுடைய பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மதவெறியர்களை கண்டுபிடிக்க உளவுத்துறை தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். கொலை செய்பவர்களையும் அதை செய்ய ஊக்கப்படுத்துபவர்களையும் கண்காணித்து அதற்குண்டான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கின்றது என்ற அடிப்படையில் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும். தேசிய அளவிலான ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை, மற்ற மாநிலங்கள் இயற்ற தாமதப்படுத்துகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய முதன்மையான கோரிக்கைகள்” என்றார் அழுத்தமாக
வி.சி.க உள்ளிட்ட பல தரப்பினரும் ஆணவக் கொலைக்கு தடுப்புக்கு தனிச்சட்டத்தை உருவாக்க அழுத்தம் கொடுத்துவரும் சூழலில்.. தி.மு.க அரசு என்ன செய்யப் போகிறதென்ற விவாதம் தமிழக அரசியலில் கிளம்பியிருக்கிறது!