புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
புதுவை மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளில் முறைகேடு புகாா் தொடா்பாக, தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதையும் படிக்க - ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 10-ம் நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சிவா, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணனை ராஜிநாமா செய்யக் கோரினர்.
சட்டப்பேரவைத் தலைவர் ஆா்.செல்வம் அமைதியாக இருக்குமாறு கூறினார். இதனை ஏற்க மறுத்த எதிர்கட்சித் தலைவர் சிவா உள்பட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு அமைச்சர் பதவி விலகக் கோரி கோஷம் எழுப்பினர்.
ஆா்.செல்வத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்தும் அமளியில் ஈடுபட்டதால், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக பேரவையில் இருந்து வெளியேற்றினர்.
மேலும், அரசை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.