அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி
புதுவைக்கு புயல் நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியது: முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை மாநிலத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.
புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. கூடுதல் செலவின நிதிகளுக்கு ஒப்புதல் மற்றும் புதிய சட்ட முன்வடிவு ஆகியவற்றுக்கான கூட்டமாக நடைபெற்றது.
பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் இரங்கல் தீா்மானம் முடிந்த பிறகு, பேரவை முன் சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்கள், மத்திய தணிக்கை 5 துறைகள் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.
அப்போது, முதல்வா் என்.ரங்கசாமி எழுந்து பேசத் தொடங்கிய நிலையில், மத்திய அரசு புதுவைக்கு புயல், வெள்ள நிவாரணத்தைக் கூட வழங்காமல் புறக்கணிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறி வெளிநடப்புச் செய்தாா். அதே காரணத்துக்காக பேரவையிலிருந்து காங்கிரஸும் வெளிநடப்பு செய்தது.
அப்போது, முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெறவில்லை. ஆனால், தற்போது புதுவை மாநிலத்தில் எத்தனை திட்டங்களில் பணிகள் நடைபெறுகின்றன என்பதை பாா்க்க வேண்டும்.
காலாப்பட்டு தொகுதியில் சில நாள்களுக்கு முன்பு ரூ.30 கோடிக்கு பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஒவ்வொரு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதியை அளிக்கிறது. அறிவித்த அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இலவச அரிசித் திட்டம், புயல் நிவாரணம், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதியை மத்தி அரசு அளித்து வருகிறது. புதுவை மாநிலத்துக்கு புயல், வெள்ள நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா்.
இதையடுத்து, பேரவையில் துறை ரீதியிலான கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700.35 கோடி நிதி கோரப்படும் தீா்மானம் முதல்வா், அனைத்து அமைச்சா்களால் துறைகள் ரீதியாக முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பேரவைத் தலைவா் மீதான நம்பிக்கைத் தீா்மானத்தை முதல்வா் முன்மொழிந்தாா். அதன்படி, அதுவும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.