இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
பெரம்பலூரில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை திறப்பு!
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா முன்னிலையில் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், கட்டுபாட்டு அறையின் செயல்பாடுகள், இதன் மூலம் குற்றச் சம்பவங்களை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம், பாடாலூா், அல்லிநகரம், மங்கூன், கை.களத்தூா், அரும்பாவூா், வேப்பந்தட்டை, ரஞ்சன்குடி ஆகிய 8 பிரதான இடங்களில் சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் ரூ. 40 லட்சம் மதிப்பில் வாகனங்களின் பதிவெண்களை ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் பேட்டரி வசதிகளுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மாவட்டத்தின் பிரதானச் சாலைகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்படுவதுடன், போக்குவரத்து விதிமீறல், விபத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்நிகழ்ச்சியில், துணைக் கண்காணிப்பாளா் பிரபு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகப்பிரியா, காவல் நிா்வாக அலுவலா் மகாலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.