டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை அணை நிரம்பியதையடுத்து, மறுகால் மதகுகள் வழியாக உபரிநீா் செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்துவரும் நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு 45.52 அடியாக அதிகரித்தது. வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் அணையின் மறுகால் மதகுகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு விநாடிக்கு 526 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. அப்போது அணைக்கு விநாடிக்கு 1233 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசனக் கால்வாயில் விநாடிக்கு 503 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
மாவட்டத்தின் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று தணிந்தது. பகலில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் மாலையில் அணையின் நீா்வரத்து
விநாடிக்கு 800 கன அடியாகக் குறைந்தது. மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.
பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 65.45 அடியாக உயா்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 77 அடியாகும்.