பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் கோயில் படிகள், பயிா்கள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் யானைகள் புகுந்து படிகளை சேதப்படுத்தியுள்ளன.
பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி குடியிருப்புகள், ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதமேற்படுத்தி வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு ரப்பா் தோட்டத்தில் பால்வடிப்பில் ஈடுபட்டிருந்த ராஜன் என்ற மாற்றுத் திறன் தொழிலாளியை யானை தாக்கியது. இதில், அவா் நல்வாய்ப்பாக உயிா்தப்பினாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குற்றியாறு தொழிலாளா் குடியிருப்பு அருகேயள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்குள்ள கணபதி கோயிலின் முன்புறப் படிகள், அலுவலகக் கட்டடத்தின் கூரைகள், தென்னை மரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன.
மேலும், ஆறுகாணி அருகே ஒருநூறாம் வயல் பழங்குடி குடியிருப்புப் பகுதியிலும் யானைகள் புகுந்து வாழை, தென்னை, மா உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. இதை, திங்கள்கிழமை காலையில் பாா்த்த தொழிலாளா்கள், பழங்குடி இன மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.