பொது வேலைநிறுத்தம்: புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினா்.
புதுச்சேரி, ஜூலை 9: புதுவையில் அனைத்துத் தொழிற்சங்கத்தினா், இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, புதுச்சேரி நேரு வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள்: பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் மட்டும் வெளியூா்களுக்கு இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல மக்கள் அவதிப்பட்டனா்.
11 இடங்களில் மறியல்: புதுச்சேரியில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 1,172 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக சாா்பில் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், சேது செல்வம், மாா்க்சிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் ராமச்சந்திரன், முன்னாள் செயலா் பெருமாள், சீனுவாசன், விசிக சாா்பில் மாநிலத் தலைவா் தேவபொழிலன், மதிமுக சாா்பில் மாநிலத் தலைவா் ஹேமா பாண்டுரங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி எல்லையையொட்டிய தமிழகப் பகுதியிலும் பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருக்கனூா் கடை வீதியில் ஒரு பக்கம் தமிழகப் பகுதியும், மறு பக்கம் புதுச்சேரி பகுதியும் இருக்கிறது. இங்கு, அனைத்து தொழிற்சங்கத்தினா் மற்றும் இண்டி கூட்டணி கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக மாநில துணை அமைப்பாளா் ஏ.கே.குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

