போலீஸுக்கு தண்ணிகாட்ட குளத்தில் குதித்த இளைஞர் - படகில் சென்று தட்டி தூக்கிய தீயணைப்பு வீரர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த காட்டாத்துறை குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (43). கட்டடம் கட்டும் கொத்தனாராக வேலை செய்துவருகிறார். இவர் காட்டாத்துறையில் விஜி என்பவர் நடத்தி வரும் இறைச்சி கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு வரும் விஜியின் நண்பர்கள் காட்டாத்துறை புலையன்விளையை சேர்ந்த விஜின்குமார்(43), பறக்கை கக்கன்புதூரை சேர்ந்த ஸ்டாலின்(33) ஆகியோரும் ஸ்டீபனுக்கு அறிமுகம் ஆனார்கள்.
இந்த நிலையில் இறைச்சி கடைக்கு இறைச்சி வாங்க சென்ற போது, விஜி மற்றும் அவரது நண்பர்களான விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் ஸ்டீபனை கேலியாக பேசி சிரித்துள்ளனர். அதுபற்றி ஸ்டிபன் கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக கடந்த 22-தேதி இரவு குருவிளைகாடு சந்திப்பு பகுதியில் நின்ற ஸ்டீபனை, விஜி மற்றும் அவரது நண்பர்கள் விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் வழி மறித்து தாக்கியதுடன், அரிவாளாலும் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டீபனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஸ்டீபன் அளித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி விஜி, விஜின்குமார், ஸ்டாலின் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதில் விஜி, விஜின்குமார் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். ஸ்டாலினை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பறக்கை பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விஜினை கைதுசெய்ய சென்றனர்.
பறக்கை குளத்தின் கரையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் தனிப்படை போலீஸாரை கண்டதும் குளத்தில் குதித்தார். அந்த குளம் தாமரை மற்றும் பாசிகளால் நிரம்பி உள்ளது. இதை பயன்படுத்தி ஸ்டாலின் பாசிகளுக்கு இடையே புகுந்து நீரில் மூழ்கி பதுங்கினார். அவர் வெளியே வருவார் என தனிப்படை போலீஸார் காத்திருந்தனர். ஆனால் தண்ணீருக்குள் மூழ்கியவாறே, ஸ்டாலின் தனிப்படை போலீசாருக்கு போக்கு காட்டினார்.

போலீஸார் திரும்பி சென்றுவிடுவார்கள் என நினைத்தார் ஸ்டீபன். ஆனால், போலீஸார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அவசர காலத்தில் பயன்படுத்தும் ரப்பர் படகை குளத்தில் இறக்கி, படகு மூலம் குளத்தில் பதுங்கியிருந்த ஸ்டாலினை பிடித்தனர். அவரை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், தக்கலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.