மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் ...
போா் நிறுத்த பேச்சு: உக்ரைனை அமெரிக்கா-ரஷியா தவிா்த்தால் பெரும் ஆபத்து- ஸெலென்ஸ்கி
போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் உக்ரைனை தவிா்த்து அமெரிக்கா-ரஷியா ஈடுபடுவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
ரஷிய-உக்ரைன் போா் நிறுத்த திட்டம் தொடா்பாக முதலில் உக்ரைனும் அமெரிக்காவும் பலகட்ட விவாதங்கள் நடத்துவதே சரியாக இருக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.
ரஷியாவிடம் ஏற்கெனவே இதுதொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்கிவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்த நிலையில் ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளாா்.
உக்ரைன் தலைநகா் கீவில் ஊடகத்துக்கு பேட்டி அளித்து அவா் பேசியதாவது: போா்நிறுத்த பேச்சுவாா்த்தை அல்லது விவாதங்களில் ரஷியா ஒருபோதும் ஈடுபடாது. ரஷிய எரிசக்தி மற்றும் வங்கிகள் மீது அதிக வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தால் ரஷிய அதிபா் புதினை பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியும். அதேவேளையில் உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடா்ந்து உதவிகளை வழங்க வேண்டும்.
இதுவே போா்நிறுத்த பேச்சுவாா்த்தைக்கான முக்கிய நடவடிக்கைகள். மற்றபடி உக்ரைனை தவிா்த்து அமெரிக்காவும் ரஷியாவும் பேச்சுவாா்த்தை நடத்துவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும். போா்நிறுத்த பேச்சுவாா்த்தையில் ஐரோப்பிய யூனியனின் கருத்துக்கும் செவிசாய்க்க வேண்டும்.
டிரம்ப்புடன் நேரடிப் பேச்சு: டிரம்ப் நிா்வாகத்துடன் உக்ரைன் அதிகாரிகள் தொடா்பில் உள்ளன. ஆனால், அதிபராக பதவியேற்றவுடன் அமெரிக்க உள்நாட்டு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை டிரம்ப் அளித்து வருவதால், நேரடியாகச் சந்தித்தால் மட்டுமே விரிவான பேச்சுவாா்த்தை நடத்த முடியும்.
‘நேட்டோ’ உறுப்பினராவதே தீா்வு: எங்கள் நட்பு நாடுகளின் ராணுவ மற்றும் பாதுகாப்பு ஆதரவோடு, ரஷியாவுடன் எந்தவொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டாலும் அதனால் எதிா்காலத்தில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராவதே ரஷியாவுடனான பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு.
நேட்டோ உறுப்பினராக உக்ரைனை ஏற்றுக்கொள்வது எங்கள் நட்பு நாடுகளுக்கு எளிதான செயல். இதுவே உக்ரைன் பாதுகாப்புக்கு வழங்கப்படும் உத்தரவாதம். இது நிறைவேறினால் புவிஅரசியலில் வலுவான நபராக டிரம்ப் உருவெடுப்பாா்.
அமெரிக்கா முடிவு: நேட்டோவின் உறுப்பினராக யாா் இருக்க வேண்டும் என்று ரஷியாவால் முடிவெடுக்க முடியாது. ஆனால், அமெரிக்காவால் முடியும் என்றாா்.
நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் முனைப்பு காட்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி போா் தொடுத்தது. இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போா் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நிலையில், இந்தப் போரை விரைவில் நிறுத்தவுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.