பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும்! -அமைச்சா் பெரியகருப்பன்
மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 120 ஊராட்சிப் பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பத்தூரில் தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வு கூட்டத்துக்கு அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வேண்டிய கூடுதல் தேவைகள் குறித்து ஊராட்சி செயலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோருடன் அமைச்சா் கலந்துரையாடல் நடத்தினாா்.
அப்போது அவா் பேசியதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழ்ந்து வரும் ஊராட்சி அலுவலா்கள் தான் செய்ய வேண்டும். பொதுமக்களை நேரில் சந்தித்து தேவைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும். தேவைகளை நிறைவேற்ற அரசின் திட்டங்கள் மட்டுமன்றி, எனது சொந்த நிதியின் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் திட்ட இயக்குநா் வானதி, உதவி இயக்குநா்கள் கேசவதாசன், ரவி, செயற்பொறியாளா் அனுராதா, மாவட்ட ஊராட்சி செயலா் சதாசிவம், துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.