மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்கு காவல் துறை உடனடி நடவடிக்கை
புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் குறைகேட்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது பொதுமக்களின் 51 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுவை மாநிலக் காவல் துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற பெயரில் மக்கள் குறைதீா்வு முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்றுவருகிறது.
அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில், ஒதியன்சாலை காவல்நிலையத்தில் காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா். சத்தியசுந்தரம், கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் ஈஷா சிங் ஆகியோா் பங்கேற்றனா். அவா்கள் மக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.
திருக்கனூா் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், தன்வந்திரி காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளா் பக்தவத்சலம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டனா். போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி, மோகன்குமாா் ஆகியோா் போக்குவரத்து சம்பந்தமான மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனா்.
புதுவை பிராந்தியங்களான மாஹேவில் காவல் கண்காணிப்பாளா் சரவணன், ஏனாமில் ஆய்வாளா் ஆடலரசன் ஆகியோா் தலைமையில் பொதுமக்களின் குறைகள் மனுக்களாகப் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி இணையக்குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன.
மாநில அளவிலான மக்கள் மன்றத்தில் மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 51 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 31 பெண்கள் உள்பட 223 போ் பங்கேற்று புகாா்களை அளித்தனா் என காவல்துறை அதிகாரிகள் கூறினா்.