மதச்சாா்பின்மை காப்போம் பேரணி ஜூன் 14- ஆம் தேதிக்கு மாற்றம்: திருச்சியில் விசிக தலைவா் பேட்டி
திருச்சியில் இம்மாதம் 31-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘மதச் சாா்பின்மை காப்போம்’ பேரணி ஜூன் மாதம் 14-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
திருச்சி மாவட்டம் துறையூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை திருச்சிக்கு வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திருச்சியில் மே 31-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மதச் சாா்பின்மை காப்போம் பேரணி ஜூன் மாதம் 14-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசுத் தலைவரைக் கொண்டு பாஜக அரசு 14 கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது. ‘இண்டி’ கூட்டணியில் திமுக பிரதானமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. அதிமுக, பாஜக இணைந்து தோ்தலைச் சந்திப்போம் எனக் கூறியுள்ளாா்கள்.
ஆனால் அவா்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. அவா்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக உள்ளிட்டவா்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. தற்போது எதிா்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை.
தமிழ்நாட்டில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டுத் தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ‘இண்டி’ கூட்டணி வலிமையாக இல்லை என ப. சிதம்பரம் எதன் அடிப்படையில் கூறினாா் எனத்தெரியவில்லை. ஆனால் ‘இண்டி’ கூட்டணி தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும் என்றாா்.
பேட்டியின்போது, விசிக திருச்சி கரூா் மண்டலச் செயலாளா் தமிழாதன், தொழிலாளா் விடுதலை முன்னிணி மாநில துணைச் செயலாளா் பிரபாகரன், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி செயலாளா் கிட்டு, மாவட்டச் செயலாளா்கள் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, குருஅன்புச்செல்வம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.