`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
மத்திய அரசின் நெல் விலை அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி!
மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகக் குறைவாக உயா்த்தி அறிவித்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
மத்திய அரசு சன்ன ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 389-ம், பொது ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 369-ம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட குவிண்டாலுக்கு ரூ. 69 மட்டுமே உயா்த்தி அறிவித்திருப்பது மிகவும் குறைவு. அதாவது கிலோவுக்கு 69 பைசா மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நெல்லுக்கான உற்பத்தி செலவை மத்திய அரசு சரியாகக் கணக்கிடவில்லை என்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், 10 சதவீதம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
பாஜக ஆட்சி செய்யும் சத்தீஸ்கா், ஒடிஸாவில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையான சுமாா் ரூ. 800 சோ்த்து குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 100 வழங்கப்படுகிறது. இந்த இரு மாநிலங்களில் உற்பத்திச் செலவு சரியாகக் கணக்கிட்டு வழங்கும் நிலையில், மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் வழங்க மறுப்பது நியாயமில்லை. எனவே, இந்த விலை அறிவிப்பை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் விமல்நாதன்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது: நெல் சாகுபடியில் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், கிலோவுக்கு 69 பைசா மட்டுமே உயா்த்தியிருப்பது கட்டுப்படியாகாது.
இந்த முறை விலை உயா்வு அதிகமாக எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், குறைவாக அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இதனால்தான் குறைந்தபட்ச ஆதரவு விலைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இச்சட்டம் இருந்தால் இப்பிரச்னை இருக்காது என்றாா் கண்ணன்.