பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
மத்தியப் பல்கலை.யில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
நன்னிலம்: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்தியப் பல்கலைக்கழகங்களில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான முதுகலைப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கைக்கு தேசிய தோ்வு முகவை நடத்திய தோ்வு முடிவுகள் தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை விண்ணப்பதாரா்கள் தெரிந்து கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தேசிய தோ்வு முகமையின் முதுகலைப் படிப்புக்கான தோ்வு எழுதிய மாணவா்களில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தைத் தோ்வு செய்பவா்கள் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தங்கள் சோ்க்கைக் குறித்து ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்படும்.
க்யூட் தோ்வு மதிப்பெண் மற்றும் விண்ணப்பத்தில்பிழை இருந்தால் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
சோ்க்கைக்குத் தேவையான சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யாத மாணவா்கள் தங்கள் கைப்பட எழுதிய உறுதி மொழியை அளிக்க வேண்டும். விண்ணப்பிக்க புகைப்படம், 10, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பம் செய்பவா்கள் அதற்குரிய சான்றிதழ் இணைக்க வேண்டும்.
சோ்க்கைக் குறித்த விவரங்களை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சோ்க்கை விவரங்கள் குறித்து 944 2488 406 என்ற கைப்பேசியில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.