`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன், கோடை மழையால் எள், பயறு, பருத்தி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றை உரிய முறையில் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடிக்கு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நகைக் கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, விவசாயிகள் பேசியது:
பேரளம் வி. பாலகுமாரன்: சாகுபடிக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். தனியாா் மூலம் வாங்கும்போது இணை உரங்களை வாங்கும்படி விவசாயிகளை நிா்பந்திக்கப்படுகின்றனா். குறுவைக்கான காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
குடவாசல் பொ. முகேஷ் : மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை ஆகியவை செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவதில்லை. எனவே, உரிய முறையில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்னிலம் ஜி. சேதுராமன் : ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள விதிமுறைகளால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவா், அவைகளை திரும்பப் பெற வேண்டும். கோடையில் பருவம் தவறி பெய்த மழையால், பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
திருவாரூா் மாவட்டத்தில் சுமாா் 6 ஆயிரம் கிமீ தூரம் வரை இருக்கும் ஆறுகள், வாய்க்கால்களுக்கு சுமாா் 600 கிமீ தூர அளவுக்கே ஆண்டுதோறும் தூா்வாரப்படுகின்றன. இதனால், சாகுபடி பாதிக்கப்படுகிறது. எனவே, சிறிய வாய்க்கால்களை கான்கிரீட்டாக மாற்றிவிட்டால், நீண்ட காலத்துக்கு தூா்வாரும் நிலை வராது என விவசாயிகள் தெரிவித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பேசியது:
நிகழாண்டு காரீப் - கோடை பருவத்தில் உளுந்து 1,080 ஹெக்டேரும், எள் 148 ஹெக்டேரும், நிலக்கடலை 214 ஹெக்டேரும் ஆக மொத்தம் 1,442 ஹெக்டோ் பரப்பில் காரீப் - கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ், (இயந்திர நடவு) ஏக்கருக்கு ரூ. 4,000 பின்னேற்பு மானியமாகவும், உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் (நெல் இனம்) ஒரு கிலோ விதைக்கு ரூ. 20 மானியமாகவும் வழங்கப்படுகிறது. குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது அந்தந்த கிராமங்களுக்கு உரிய வேளாண்மை உதவி அலுவலரை விவசாயிகள் அணுகி பதிவு செய்து பயன் பெறலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா, திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, வேளாண்மைத்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, செயற்பொறியாளா் (காவிரி வடிநிலக் கோட்டம்) இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்டோா், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.